Thursday, April 5, 2012

I...P...L...1


”போகிற போக்கில் ஐ...பி...எல்...1”

விளம்பரங்கள் என்ன... வினோதங்கள் என்ன... கொண்டாட்டங்கள் என்ன.... கோலாகலங்கள் என்ன...
திரு விழாக் கோலம் பூண்டது ஐ...பி...எல்... கிரிக்கட் போட்டிகள்..!

இரண்டு முறை அடுத்தடுத்து ‘சேம்பியன்கள்’ என்ற இறுமாப்பு..ஏகப்பட்ட மக்களின் ஆதரவு பின்பலம்
ரத - கஜ - துரக - பதாதிகளோடு களமிறங்கினார்கள் சென்னை சூப்பர் கிங்க(ர)ர் கள்...! எட்டு முறை மோதி
நான்கு முறை வென்று நான்கு முறை சென்னையிடம் தோற்ற மும்பை இந்தியன்ஸ் எதிரணி.!

நல்ல துவக்கம் ஓர் அணிக்கான இலட்சணம். முரளி விஜய் அந்த இடத்துக்குப் பொருத்தமானவர்தான் -
இந்திய அணிக்குக் கூட ஆடி இருக்கிறார். ஐ.பி.எல்.போட்டியில் சேப்பாக்கில் சதமடித்த ஒரே ஒரு வீரர்.
அந்த சதத்தில் பதினோரு சிக்சர்கள். இப்போது எழுந்த சிக்கல் அவரது ஆட்டத்தில் ஏகப்பட்ட தடுமாற்றம்..!
அவரையே களமிறக்க வேண்டிய. கட்டாயம். துணையாக இன்னொரு ‘தடுமாற்றத்தை ஜோடி சேர்த்து விட
முடியுமா...? ஆகவே,தென் ஆஃப்ரிக்காவின் அனுபவம் வாய்ந்த வீரர் டூ ப்ளஸ்ஸியை அனுப்பினார்கள்.

அவர் முதல் ஓவரிலேயே மூன்று ரன்களுக்கு ரன் அவுட்..! நான்காவது ஓவரில் அவுட்டாகி இருக்க வேண்டிய
விஜய் சற்று தாமதித்து அவுட் -பெற்ற ரன்கள் பத்து ! ரெய்னாவும் ப்ராவோவும் ஜோடி சேர ஒரு சிக்சர் உட்பட
பல பவுண்டரிகள் உதிர்ந்தன.. அத்தோடு சரி.இவர்கள் ஆட்டமிழந்த பிறகு 10-வது ஓவர் முதல் 20-வது ஓவர்
வரை ஒரு பவுண்டரி கூட அடிக்கப்படவில்லை.

ஆனால், அந்த நேரத்தில் கூட சென்னை 2 விக்கட் இழப்புக்கு 75 ரன்கள். பிறகு வெறும் 39 ரங்களுக்கு மீதமுள்ள
எட்டு விக்கட்டுகளையும் இழந்தது தான் பரிதாபம். விக்கட்டுகள் சரிவதைப் பார்த்து அல்பி மோர்க்கலுக்கு முன்பு
தோனி வந்திருக்க வேண்டும் அல்லது பத்ரிநாத்துக்கு முன்பாவது வந்திருக்க வேண்டும் அப்படிச் செய்யாதது
எதனால் என்பது புரியாத புதிர்..! அநியாயத்துக்கு அவரும் ரன் அவுட் அஸ்வினும் ரன் அவுட்.! பத்து கோடி ரூபாய்
விலை கொடுத்து வாங்கப்பட்ட ஜடேஜா வந்து ஐந்து பந்துகளை சந்தித்து மூன்று ரன்கள் பெற்று அவுட். பந்து வீச
வந்தபோது அவர் நிலை இன்னும் பரிதாபம் - ஒரே ஓவரில் 15 ரன்கள் ( என்ன கொடுமை..சரவணா.!!! ) 111 ரன்கள்
என்பது தாக்குப் பிடிக்கக் கூடிய எண்ணிக்கையா..?

45 பந்துகளில் சதமடித்துப் புகழ் பெற்ற ரிச்சர்டு லெவியுடன் களத்துக்கு வந்தார் சச்சின். 35 பந்துகளில் 3 சிக்சர்களுடன்
லெவி அரைச்சதம். சச்சின் விரலில் காயத்துடன் வெளியேற்றம். அம்பட்டி ராயுடுவும், ஃப்ராங்க்ளினும் எரிகிற தீயில்
ஜோராக எண்ணை வார்த்தார்கள்... 19 பந்துகள் மீதமிருக்க எட்டு விக்கட் வித்தியாசத்தில் மும்பை அபார வெற்றி.

மும்பை வென்றது என்பதை விட சென்னை தோற்றது என்பதே சரி.

Tuesday, April 3, 2012

IPL


IPL கிரிக்கட் போட்டிகள் தொடர்பான ஒரு நிகழ்ச்சியை
Moon தொலைக்காட்சி தினசரி பிற்பகல் ஒரு மணி முதல்
இரண்டு மணி வரை ஒளிபரப்புச் செய்கிறது. வித்தியாசமான
இந்த நிகழ்ச்சியின் முக்கிய அதிதியாக தமிழ் கிரிக்கட்
வர்ணனையாளர் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் கலந்து
கொண்டு சுவையான விஷயங்களை நேயர்களுடன் பகிர்ந்து
கொள்கிறார். அஸீம் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சியின்
தயாரிப்பு மணீஷ். நெறியாள்கை ஹசன்.

Tuesday, March 27, 2012

ஆங்கிலத்திலிருந்து தமிழிலில் நபிகள் பெர்மானார் சரிதை


அறிஞர் MRM அப்துர்-ரஹீம் பல தன் முனைப்பு நூல்களை எழுதி
உள்ளார். ”இஸ்லாமிய கலைக் களஞ்சியத் தொகுப்பு” சிகரம்.

நபிகள் பெருமானாரின் வாழ்க்கைச் சரிதையை வசன நடையாகவும்
கவிதை வழியிலும் எழுதியுள்ளார்.

அவர் ஆங்கிலத்தில் எழுதிய பெருமானார் சரிதை “ MUHAMMAD the
PROPHET". சுமார் 800 பக்கங்கள் கொண்ட இந்த நூலை “ இறைத்தூதர்
முஹம்மத்” என்ற பெயரில் நான் மொழிபெயர்த்துள்ளேன்.

2011 மே மாதம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற
பன்னாட்டு இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் இது வெளியிடப்
பட்டது.

இந்த நூலை மொழிபெயர்த்ததற்காக, நான் கற்ற ஸாஹிரா கல்லூரி
மற்றும் Sri Lanka Muslim Media Forum சார்பாக என் பள்ளித் தோழர் அல்
ஹாஜ் A.H.M.அஸ்வர் MP தலைமையில் ஒரு பாராட்டு விழா
நடத்தினார்கள். பாராட்டுடன் ஒரு பட்டமும் தந்தார்கள்.

“முத் - தர்ஜிம் மும்தாஸ் “ (அழகிய மொழியியலாளர்) என்பதுதான்
அந்தப் பட்டம். எல்லாப் புகழும் இறைவனுக்கே..!

இலங்கை கலையுலகின் துருவ நட்சத்திரம்


அத்தனை பணிகளுக்கு மத்தியிலும் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர் அவர்கள் அனுப்பி வைத்த கைபேசி குறுஞ்செய்தி - சகோதரி விசாலாக்‌ஷி தேம்பி அழுத வண்ணைமும். சகோதரர் BH குரல் கம்ம தொலைபேசி வாயிலாகத் தந்த அந்த சோகத் தகவல் என்னை அதிர வைத்தது - பதற வைத்தது - துக்கத்தால் தொண்டையை இறுக வைத்தது.

ராஜேஸ்வரி சண்முகம் - இலங்கை கலை உலகின் துருவ நட்சத்திரம் - யாழ்ப்பாணம் சென்ற இடத்தில் மாரடைப்பால் இயற்கை எய்தினார் என்பதுதான் இதயத்தைக் கனக்கச் செய்த அந்த சோகச் செய்தி.

ஒன்றா இரண்டா அறுபது ஆண்டுகாலப் பழக்கம் - கலை உலகில் இணைந்த பயணம். வர்த்தக ஒலிபரப்பு பிரபல்யமாகு முன்பு, தேசிய ஒலிபரப் பொன்றே கலை உலக ஆக்கங்களுக்கு வடிகாலாய் அமைந்த காலை, அமரர் “சானா” சண்முகநாதன் நெறியாழ்கையில் கொடி கட்டிப் பறந்த “நாடக அரங்கில், அச்சாணி போல் திகழ்ந்த இரு அங்கங்கள் நானும் சகோதரி ராஜேஸ்வரி பிச்சாண்டியும்.

ஆண்களில் ஸ்ரீதர் பிச்சையப்பாவின் தந்தை டி.எஸ்.பிச்சையப்பா, “மாடசாமி” சோமசுந்தரம், தாசன் பெர்னாண்டோ, ரொசாரியோ பீரிஸ், விக்டர், ”விதானையார்” கார்த்திகேசு சிவத்தம்பி, வீ.சுந்தரலிங்கம் ”ரேடியோ மாமா” சரவணமுத்து, எம்.எஸ்.ரத்னம், TPO நடராஜா என்று ஒரு ஜாம்பவான்கள் பட்டாளம். அவர்களுடன் நானும்..!


பெண்களில் ஃபிலோமினா சொலொமொன், பஞ்சவர்ணம் லக்‌ஷ்மணன், ஆனந்தி சுப்ரமண்யம் (சூர்யபிரகாஷ்), சரசாம்பிகை சுப்ரமனியம், ஜோசஃபீன் ரொசாரியோ, ஜோசஃபீன் கோஸ்தா, பரிமளாதேவி விவேகானந்தா, தீரா ஆறுமுகம் என்று திறமைசால் கலைஞிகள் என்றோர் கூட்டம், அவர்களுள் எழுத்தாளர் சண்முகத்தை மணந்து கொண்டதால் திருமதி சண்முகமாகிவிட்ட ராஜேஸ்வரியும்..!

எழுத்தாளர்களில் கலாநிதி கைலாசபதி, இலங்கையர்கோன், தாளையடி சபாரத்னம். ஸக்கரியா சிமியோன், சண்முகம், நஸ்ருத்தீன், NSM ராமையா, சில்லையூர் செல்வராசன், காவலூர் ராசதுரை, “எஸ்போ” என்ற அற்புதமான ஆற்றல் மிக்கவர்களின் படைப்புகளை கூர்த்த மதியுடனும், தேர்ந்த ஞானத்துடன், மேற்சொன்ன கலைஞர்களுடைய அபாரத் திறமையாலும் மெருகுசேர் நாடங்களை உருவாக்கி இலங்கை வானொலி நிகழ்ச்சிகளிலேயெ “நாடக அரங்கை” தனித்வத்துடன் திகழச செய்தவர் அந்த மாபெரும் கலைஞர் “சானா”
சண்முகநாதன்...!
.

சானாவுக்கு யாரும் - எந்தக் கலைஞரும் தென்னிந்திய நட்சத்திரங்களின் பிரதிபலிப்பு என்று சொல்வது கட்டோடு பிடிக்காது. அதனால் தன்னை இலங்கை சிவாஜி, இலங்கை MR ராதா என்று சொல்லிக் கொண்டு வந்தவர்கள் ‘ஒடிசன்’ கட்டத்திலேயே கழற்றி விடப்பட்டு விடுவார்கள்.

ஆனால் இதில் ஒரு நகை முரண் உண்டு. என்னை சிவாஜியாகவும், ராஜேஸ்வரியை நடிகை பத்மினியாகவும், விசாலாக்‌ஷியை நடிகை சாவித்திரியாகவும் வர்ணித்து நேயர்கள் எழுதும் கடிதங்களை தனியாக எடுத்து வைத்து பிறகு எங்களிடம் ரகசியமாகக் காண்பித்து தானும் குதூகலிப்பார். அத்துடனில்லை, “நீங்கள் நீங்களாக இருக்க வேண்டும் வேறு யாராகவும் இருக்கக்கூடாது என்பதற்கு ரசிகர்கள் உங்களுக்கு விடும் எச்சரிக்கை இது” என்று அதற்கு ஒரு புது அர்த்தமும் சொல்வார். ஆனால் நாங்கள் யாரும் யாரையும் ‘கொப்பி’ அடிப்பதில்லை என்பது அவருக்கும் தெரியும் எங்களுக்கும் நன்றாகத் தெரியும்.

ஒரு முறை ஒரு விருந்தில் என்னை பாடச் சொன்னார்கள். நான் குரலை மாற்றி ஜெயராமன் போலவே “ஈடற்ற பத்தியின்...” பாடிக் கொண்டிருந்தேன். திடீரென்று, உச்ச ஸ்தாயியில் ஒரு வீறிட்ட அலறல், பிறகு உணர்ச்சிப் பிழம்பாய், அந்தப் படத்தில் பத்மினி பேசிய வசனம், கைங்கர்யம் ராஜேஸ்வரி..!. சற்று நேரம் அரண்டு அந்தரப் பட்டுப்போன கூடியிருந்தவர்-களிடமிருந்து கிளம்பிய ஆரவார கோஷம் அந்தக் கட்டிடத்தையே கிடுகிடுக்க வைத்தது.

நானும் ராஜேஸ்வரியும் நூற்றுக்கணக்கான வானொலி நாடகங்களில் நடித்திருக்கிறோம். ஆனால் மேடை நாடகம் என்பது ஒன்றே ஒன்றுதான். அது “ லண்டன் கந்தையா “ இந்த நாடகத்துக்கு தொடக்கம் குறித்தவர் இலங்கையர்கோன் ஆனால் தொடர்ந்து எழுதியவர் சண்முகம்.

நான் நாடக அரங்குக்கு ‘ஒடிசன்’ இல்லாமலேயே தேர்ந்தெடுக்கப்பட்ட போது ‘அரைக் களிசான் போட்ட ஒரு 12 வயதுப் பொடியன். ராஜேஸ்வரி எனக்குப் பிறகுதான் உள்ளே வந்தார். என்னை விட பல வயது மூத்தவர். இலங்கையில் நீ, நான் என்று பேசும் வழக்கமில்லை. ஆனால் என்னை அவர் அப்படித்தான் அழைப்பார். கேட்டால், “இந்தப் பொடிப்பயல் என் உடன் பிறவா தம்பி, வேறு எப்படிக் கூப்பிடுவது என்பார். நானும், “சரிதான்... போ.. கிழவி” என்பேன்.

ஆனால் நாடகங்களில், காதல் காட்சிகளில், உருகி வழிவதுண்டு. நாடகங்களை தொடர்ந்து கேட்கும் ஒருவர், “உங்கள் மகனுடைய போக்கு சரி இல்லை’ என்று என் தந்தையிடம் ‘போட்டுக் கொடுக்க” என் தந்தை மெல்ல ரொசாரியோ பீரிசிடம் விசாரிக்க, அவரோ, “ ஐயோ, உங்க பையன் பச்சக் குழந்த, அதனாலே நாங்க குழந்தைகளுடைய பால் மாவின் பெயரான “ கவ் & கேட்” (Cow & Gate) என்று சொல்லித்தான் அவரை செல்லமாக அழைப்போம் என்று சொல்ல, உடனிருந்த ராஜேஸ்வரி, “ஐயா இது போன்ற ஒரு பிள்ளையைப் பெற நீங்களும் ஜபாரின் அம்மாவும் பெருமைப் பட வேண்டும்” என்றிருக்கிறார். அதற்கு என் தந்தை, “அவனுக்கு தாயார் இல்லை அம்மா” என்று கண்கலங்க , அதுவரை அது பற்றித் தெரியாதிருந்த ராஜேஸ்வரி அழுதே விட்டாராம். அதன் பிறகும் ராஜேஸ்வரி என் மீது செலுத்திய பாசமும் பரியும் உண்மையில் ஒரு தாயுடையது.

சமீபத்தில் கொழும்பு வந்திருந்த போது அவரை தொலை பேசியில் அழைத்தேன். CALLER TUNE என்ன என்கிறீர்கள், தனுஷின் “கொலவெறி..டி..”. “கிழவிகளுக்கெல்லாம் ஏன் இந்தக் கொலவெறி..? என்று நான் கேட்ட போது, மறுமுனையில் கேட்டகணீர் வெடிச் சிரிப்பு ராஜேஸ்வரியின் ‘ட்ரேட்-மார்க்’. அது இன்னும் என் காதுகளில் ரீங்கரித்துக் கொண்டிருக்கிறது.

சமீபத்தில் கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் ரஸ்மினின் ‘ சமூக வானொலி” நூல் வெளியீட்டு விழாவில், அங்கு வந்திருந்த பிரமுகர்களிடமெல்லாம், அவர்களது கை எழுத்துக்களை திரட்டி அதை ராஜேஸ்வரியக் கொண்டு என்னிடம் கொடுக்கச் செய்து எங்கள் இருவரையும் வித்தியாசமான முறையில் கௌரவித்தார்கள். அப்போது சிவாஜிக்கு பத்மினி அளிக்கும் கௌரவம் என்றார் அவருக்கே உரிய வாஞ்சையுடன்..!

ராஜேஸ்வரிக்கு அழகான கணீரென்ற குரல் - தெளிவான அட்சர சுத்தமான உச்சரிப்பு - கையாளும் பாத்திரத்தின் மீது பரிபூரண ஆளுமை - அற்புதமான நடிப்பு. இவை அத்தனையும் ராஜேஸ்வரியின் தனிச் சிறப்புகள் - முத்திரைகள். பிற்காலத்தில் வர்த்தக ஒலிபரப்பில் ராஜேஸ்வரியும் விசாலாக்‌ஷியும் கொடி கட்டிப் பறந்ததற்கு அவர்களது சொந்தத் திறமை போக “நாடக அரங்கு” என்ற பயிற்சிப்பட்டறையில் பெற்ற பட்டறிவும் ஒரு முக்கிய காரணம் என்றால் அது மிகையல்ல.

அடக்கத்துடன் ஒன்று சொல்வேன். உலகிலேயே மூத்த தமிழ் ஒலிபரப்பாளர்களாக ஆண்களில் நானும், பெண்களில் ராஜேஸ்வரியும் இருந்தோம். இன்று அதில் ஒரு பாதி இல்லை. காலம் புதுப் புது கலைஞர்களை தோற்றுவித்துக் கொண்டே இருக்கும் ஆனால் இழந்தவைகளை ஈடு செய்ய அதனால் இயலாது - முடியாது. அந்த வகையில் ராஜேஸ்வரியினுடையது ஈடு செய்ய முடியாத பேரிழப்பே.

மூத்த ஒலிபரப்பாளன் என்கிற முறையில் சில நண்பர்கள் சேர்ந்து ஒரு விழா எடுக்க என்னை அணுகினார்கள். அப்படி ஒன்று நிகழ்வதாயின் ராஜேஸ்வரியையும் இந்தியாவுக்கு அழைத்து அந்த விழாவில் கௌரவிக்கச் செய்ய வேண்டும் என்று அவாக் கொண்டேன்.

ஆனால், இறைவன் இந்த சாமான்யனை முந்திக் கொண்டு மரணம் என்னும் மஹா பெரிய மகத்தான விருதை - கௌரவத்தை ராஜேஸ்வரிக்கு வழங்கி விட்டான்.

உள்ளத்து உணர்வுகளை எல்லாம் ஒன்று திரட்டி ஒன்று சொல்கிறேன்... போ கிழவி போ...எங்கள் உணர்வுகளில் என்றென்றும் கலந்திருப்பாய்....இதயங்களில் நிறைந்திருப்பாய்....கலாபிமானி களின் நெஞ்சங்களில் கண்னியத்துடன் கொலு வீற்றிருப்பாய்... கடந்த கால நினைவுகள் எண்னத் திரையில் பயணிக்க... கண்ணீர் கண்களை நிறைக்க பிரியா விடை தருகிறோம்... போ கிழவி..போ.